கூகுள் நிறுவனம் தன்னுடைய இணையதளத்தின் முதல் பக்கத்தில் சாதனைகள், விருதுகள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை சிறப்பிக்க தன்னுடைய லோகோவை ஒவ்வொரு நாளும் மாற்றி அமைக்கும். கடந்த 1998ஆம் ஆண்டு முதல் கூகுள் டூடுல் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் தற்போது வரை 20 வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. அதன்படி இன்றைய கூகுள் டூடுளில் அரவிந் கண் மருத்துவமனை நிறுவனர் மற்றும் கண் மருத்துவரான கோவிந்தப்பா வெங்கடசாமி என்பவரின் 100வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறது.

தமிழ்நாட்டில் மதுரையை சேர்ந்தவரான இவர் சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்த பிறகு ராணுவ துறையில் சேர்ந்து போரில் காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். பர்மா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் யுத்த களத்தில் மருத்துவராக பணிபுரிந்துள்ளார். இவரை முடக்குவாதம் தாக்கியதால் இவர் ராணுவத்தில் தொடர்ந்து பணிபுரியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

முடக்குவாதத்தில் இருந்து மீண்டு வந்தாலும் இந்த நிலைமையில் தன்னுடைய கைகளால் மருத்துவம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு இவர் கண் மருத்துவத்தில் முதுகலை பட்டயப் பட்டமும், கண் அறுவை மருத்துவத்தில் முதுநிலை பட்டமும் பெற்றார். பின்னர் 1956இல் மதுரை அரசு மருத்துவமனையில் தலைமை பொறுப்பேற்று தன்னுடைய ஓய்விற்கு பிறகு 1976இல் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க மதுரையில் 11 படுக்கை மட்டும் கொண்ட அரவிந் கண் மருத்துவமனையை துவங்கினார்.

தற்போது இவருடைய அரவிந் கண் மருத்துவமனை தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றது. கண் மருத்துவம் மூலம் ஏழைகளுக்கு இலவசமாக உதவி செய்து வந்த இவர் தன்னுடைய 87வது வயதில் 2006இல் ஜூலை மாதம் 7ஆம் தேதி உயிரிழந்தார். உலகம் முழுவதும் பிரபலமான மருத்துவமனையாகவும் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையும் இலவச மருத்துவ வசதியுடன் செயல்பட்டு வருகின்றது.