மதவாதத்தை கிளப்பும் உலக நாயகனின் பேச்சு கண்டனம் தெரிவித்த பிரபல நடிகர்
தமிழ் சினிமாவின் பன்முக கலைஞராகவும் இந்தியாவில் பிரபலமான மூத்த நடிகர்களில் முக்கியமானவராகவும், தற்பொழுது அரசியல் பிரமுகராகவும் பார்க்கப்படுகிறார் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக இருக்கும் நமது உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தின் போது பேசிய சில விஷயங்கள் தற்பொழுது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பிரபலமான ஊடகங்களில் ஒன்றான “டைம்ஸ் நொவ்” தொலைக்காட்சி உலக நாயகன் அவர்கள் பேசிய சில விஷயங்களை வைத்து ஒரு விவாதத்தையே நடத்தி முடித்துள்ளனர். அப்படி என்னபேசினார் நமது உலக நாயகன்?
பிரச்சாரத்தின் பொழுது அவர் பேசியதாவது, “முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் இது என்பதனால் நான் இதை சொல்லவில்லை, காந்தியாரின் சிலைக்கு முன்னாள் இதை சொன்னேன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்த கொலைக்கு கேள்விகேட்க வந்துள்ளேன், அப்படி நினைத்துக் கொள்ளுங்கள். இது நாடு சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, தேசியக்கொடியின் மூவர்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை, நான் நல்ல இந்தியன். மார்தட்டி சொல்வேன்” என்று பேசியிருந்தார்.
நடிகர் கமல் ஹாசன் அரவக்குறிச்சியில் பேசிய இந்த பிரச்சாரத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் அவர்கள் கமல் ஹாசனின் இந்த மாதிரியான பேச்சுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கண்டன பதிவை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது, “அன்பிற்குரிய கமல் ஹாசன் அவர்களே, நீங்கள் ஒரு சிறந்த கலைஞர், நமது கலையுலகத்தில் எப்படி ஜாதி, மதம் போன்றவை இல்லையோ, அதே போல தீவிரவாதமும் ஜாதி, மதம் அற்றது. தவறு செய்த யாவரும் குற்றவாளிகள் தான் அதில் இந்து குற்றவாளி, முஸ்லிம் குற்றவாளிகள் என்று ஏன் பார்க்கவேண்டும்.
கோட்சே ஒரு தீவிரவாதி என்று சொல்லலாமே, ஏன் கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று சொல்லவேண்டும். நீங்கள் பிரச்சாரம் செய்யும் இடம் அதிக முஸ்லிம்களை கொண்ட இடம் என்பதற்காகவா? இல்லை ஓட்டு சேகரிப்பதற்காகவா?” இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு டுவிட்டர் பதிவில், “எல்லா சிறிய பெரிய கலைஞர்களிடத்திலும் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன், தயவு செய்து ஒன்றாக இருக்கும் இந்தியர்களை பிரிக்காதிர்கள். நாம் எல்லோரும் இந்தியர்கள் தான். ஜெய் ஹிந்த்” என்றும் கூறியுள்ளார் நடிகர் விவேக் ஓபராய்.