46 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்
சமீபத்தில் நடைபெற்ற சைமா விருதுகள் விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியது, சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னணி நடிகர்களான கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாக பல நாட்களாகவே சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன. இது குறித்து நடிகர் கமல்ஹாசனிடம், சைமா விருதுகள் வழங்கும் விழாவில் தொகுப்பாளர் சதீஷ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தரமான சம்பவம் நடக்கப் போவதாகக் கூறுகிறீர்கள். படம் வருவதற்கு முன்பே அது தரமான சம்பவமா இல்லையா என்பது எப்படித் தெரியும்? முதலில் படம் வரட்டும், மக்கள் பார்த்துவிட்டுத் தரமான சம்பவம் என்று கூறினால், அது தரமான சம்பவமாக மாறும், என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.
மேலும், நானும் ரஜினிகாந்தும் விரைவில் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறோம், என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். இந்த அறிவிப்பு, திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.