IND vs SA 2nd ODI: தென்னாப்பிரிக்கா அணி அசத்தல் வெற்றி


ராய்ப்பூரில் நேற்று (டிசம்பர் 3) நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த இமாலய இலக்கை எட்டிப்பிடித்து அபாரமாக வெற்றிபெற்றுள்ளது. டாஸில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் மூலம் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் குறைவான ஸ்கோரில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய விராட் கோலி (102 ரன்கள்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (105 ரன்கள்) ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். மேலும், கே.எல். ராகுலின் அதிரடியான பங்களிப்பால், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் என்ற மலைபோன்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.
359 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக கேப்டன் எய்டன் மார்க்ரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் (110 ரன்கள்) அடித்தார். அவருக்கு உறுதுணையாக மேத்யூ பிரீட்ஷ்க் (68) மற்றும் இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ் (54) அதிரடி அரைசதங்கள் விளாசினர்.
விக்கெட்டுகள் விழுந்தபோதும், நிர்ணயிக்கப்பட்ட ரன் ரேட்டைத் தக்கவைத்துக்கொண்டு ஆடிய தென்னாப்பிரிக்கா அணி, 49.2 ஓவர்களிலேயே 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து, இந்திய மண்ணில் அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்ட இலக்குகளில் ஒன்றாக இந்த வெற்றியைப் பதிவு செய்தது.
தென்னாப்பிரிக்கா பெற்ற இந்த அபார வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமன் செய்யப்பட்டுள்ளது. முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.