கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம்
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் (மடிக்கணினி) வழங்கும் திட்டம், சுமார் ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீட்டில் பிரமாண்டமாக மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் மாணவர்களின் நவீன தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், டெண்டர் பணிகள் மற்றும் விநியோகத்திற்கான ஆயத்தப் பணிகளை வேகப்படுத்த அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதற்கட்டமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது
டெல் (Dell) உள்ளிட்ட பிரபல நிறுவனங்களிடமிருந்து சுமார் 10 லட்சம் லேப்டாப்களை கொள்முதல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்காக தமிழக அரசு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது
நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் முதல் விநியோகம் தொடங்கப்பட்டு, பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக இந்த விநியோகம் நடைபெறும். இந்தத் திட்டம் மாணவர்களின் டிஜிட்டல் கற்றலுக்கு உறுதுணையாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.