SS.ராஜமௌலி சர்ச்சைப் பேச்சு: அனுமனை அவமதித்ததாக புகார்

Telugu Director SS Rajamouli and Hanuman
Telugu Director SS Rajamouli and Hanuman

தனது அடுத்த படமான வாரணாசியின் தலைப்பு மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அவர் மீது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி ராஷ்டிரிய வானர சேனா (Rashtriya Vanara Sena) என்ற அமைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (நவம்பர் 15, 2025) ஹைதராபாத்தில் நடந்த வாரணாசி பட வெளியீட்டு விழாவின்போது, டீசர் திரையிடலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தாமதம் காரணமாக சற்று மனவருத்தம் அடைந்த ராஜமௌலி மேடையில் தனது தனிப்பட்ட நம்பிக்கைகளை வெளிப்படுத்தினார்.

அவர் பேசிய விஷயங்கள் என்னவென்றால்,

  • எனக்குக் கடவுள் நம்பிக்கை சுத்தமாக இல்லை.
  • என் தந்தை சிறுவயதிலிருந்தே, அனுமன் உனக்குப் பின்னால் இருந்து பார்த்துக் கொள்வார், வழிகாட்டுவார் என்று சொல்வார். ஆனால், இப்படித்தான் பார்த்துக் கொள்வாரா? இந்த குளறுபடி நடந்தபோது, எனக்குக் கோபம் வந்தது. இப்படித்தான் அவர் எனக்கு வழிகாட்டுகிறாரா
  • என் மனைவி, அனுமன் மீது தீவிர பக்தி கொண்டவர். அவர் அனுமனுடன் ஒரு நண்பரைப்போலப் பேசுவார். இதையெல்லாம் நினைக்கும்போதும் அவர் மீதும் எனக்குக் கோபம் வரும்

ராஜமௌலியின் இந்தக் கருத்துக்கள், இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், குறிப்பாகக் கடவுள் அனுமனை இழிவுபடுத்துவதாகவும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இதையடுத்து, ராஷ்டிரிய வானர சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள், ராஜமௌலியின் பேச்சு வேண்டுமென்றே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் உள்ளது எனக் குற்றம்சாட்டி, ஹைதராபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று (நவம்பர் 18, 2025) புகார் அளித்துள்ளனர்.

புகார் குறித்துப் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர். உலக அளவில் புகழ்பெற்ற ஒரு இயக்குநர், தனது அடுத்த பிரம்மாண்ட பட வெளியீட்டு விழாவில் பேசிய கருத்துக்கள் இப்போது சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Post