வா வாத்தியார் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது
நடிகர் கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்...
நடிகர் கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தயாரிப்பாளர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை இந்தத் தடை நீடிக்கும் என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து முன்பு கடன் வாங்கியிருந்தார். திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜுன்லால் சுந்தர்தாஸின் சொத்துகளைச் சென்னை உயர் நீதிமன்றத்தின் சொத்தாட்சியர் நிர்வகித்து வருகிறார்.
அர்ஜுன்லால் சுந்தர்தாஸிடம் வாங்கிய கடன் தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது ரூ. 21 கோடியே 78 லட்சம் ரூபாய் உள்ளது. இந்தக் கடனை ஞானவேல் ராஜா செலுத்தவில்லை என்றும், எனவே அவர் தயாரித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் சொத்தாட்சியர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஞானவேல் ராஜாவுக்கு நீதிமன்றம் பலமுறை அவகாசம் அளித்தும், அவர் கடனைத் திருப்பிச் செலுத்த எந்த ஒரு தீவிர முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டனர். கடன் கொடுத்தவர்கள் நீண்ட காலமாகப் பணத்தைத் திரும்பப் பெற காத்திருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை, நடிகர் கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படத்தை திரையரங்குகளிலோ அல்லது வேறு எந்த ஓடிடி தளத்திலோ வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு, பட வெளியீட்டிற்குத் தடை விதித்தது.