ரஜினியின் 173 வது படத்தை தனுஷ் இயக்குகிறாரா ?


நடிகர் ரஜினிகாந்தின் 173 வது திரைப்படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வி மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
ஆனால், சில தினங்களுக்கு முன், சுந்தர்.சி தனிப்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன் இதுகுறித்து அண்மையில் செய்தியாளர்களிடம் பேசினார். நான் ப்ரோட்யூசர் என்னுடைய நட்சத்திரமான ரஜினிக்கு பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது. அவருக்குப் பிடிக்கும் வரை நாங்கள் இயக்குநர்களிடம் கதைகள் கேட்டுக் கொண்டே இருப்போம், என்று அவர் வெளிப்படையாகக் கூறினார்.
இதற்கிடையில், தலைவர் 173-வது படத்தை நடிகர் தனுஷ் இயக்குவார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஏற்கெனவே, 'பா பாண்டி', 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்', 'ராயன்' போன்ற படங்களை இயக்கி தனது திறமையை தனுஷ் நிரூபித்திருக்கிறார். எனவே, தனுஷ் ரஜினிகாந்தை இயக்க வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்கள் பேசத் தொடங்கியுள்ளன.
தற்போது, தனுஷ் மட்டுமின்றி, கார்த்திக் சுப்புராஜ் போன்ற சிலரின் பெயர்களும் அடுத்த இயக்குநர் பட்டியலில் அடிபடுகின்றன. சுந்தர்.சி விலகலுக்குப் பிறகு, தயாரிப்பு நிறுவனம் புதிய கதை மற்றும் இயக்குநரைத் தீர்மானிக்க தீவிர ஆலோசனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் உறுதிமொழிக்கு ஏற்ப, ரஜினியின் விருப்பமான இயக்குநர் யார், படத்தின் அடுத்தக்கட்ட முடிவு என்ன என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.