மேடையில் கண் கலங்கி பேசிய சமுத்திரக்கனி
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள காந்தா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பொற்காலமான 1950 களின் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம், வருகிற நவம்பர் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விழாவில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, எனக்கு கடைசியாக சுப்ரமணியபுரம் படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது ஏற்பட்ட அதே உணர்வு, இப்போது காந்தா படத்திற்கு மீண்டும் வந்துள்ளது, உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், என்னுடைய சினிமா பயணத்தையே காந்தாவுக்கு முன், காந்தாவுக்குப் பின் என்று மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் நான் இருக்கிறேன். அந்த அளவிற்கு ஒரு சிறப்பான படைப்பில் நடித்த மனநிறைவில் உள்ளேன், என்று நெகிழ்ந்து பேசினார். இந்தத் திரைப்படம் நிச்சயமாக யாராலும் மறக்க முடியாத, ஒரு தரமான, வரலாற்று சிறப்புமிக்க படமாக இருக்கும், என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சமுத்திரக்கனியின் இந்த ஆழமான மற்றும் மனந்திறந்த பேச்சு, படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். துல்கர் சல்மான் மற்றும் சமுத்திரக்கனி இடையேயான ஒரு குரு சிஷ்யப் போரை ட்ரெய்லர் சித்தரிப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்தா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.