தமிழ் சினிமாவில் 100 நாட்களுக்கு மேல் ஓடும் திரைப்படங்களைப் பெரிய சாதனையாகப் பார்க்கிறோம். ஆனால், பாலிவுட்டின் கிளாசிக் காதல் திரைப்படமான தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே (Dilwale Dulhania Le Jayenge ) இந்தியாவில் 30 ஆண்டுகளைக் கடந்து இன்னும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருப்பது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

ஷாருக்கான், கஜோல் நடிப்பில் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், மும்பையில் உள்ள மராத்தா மந்திர் (Maratha Mandir) திரையரங்கில் இன்றுவரை திரையிடப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் மீது இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் ஆர்வம் குறையவில்லை.

சுமார் ₹4 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இந்தப் படம், உலகளவில் ₹100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக அறியப்படுகிறது. மேலும், இந்தப் படத்திற்குச் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்திற்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்தப் படத்தைப் பார்க்க, மராத்தா மந்திர் திரையரங்கில் இன்றும் டிக்கெட் விலை மிகக் குறைவாகவே உள்ளது. பால்கனி இருக்கை ₹50, வழக்கமான இருக்கை ₹30 என அந்தக் கால விலையிலேயே டிக்கெட்டுகள் விற்கப்படுவது மற்றொரு சிறப்பு.