நடிகர் அபிநய் காலமானார்: துள்ளுவதோ இளமை பிரபலம் உயிரிழப்பு





துள்ளுவதோ இளமை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் அபிநய், கல்லீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (நவம்பர் 10, 2025) அதிகாலை 4:00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 44.
சிகிச்சைக்காக நிதி உதவி தேவை என சில நாட்களுக்கு முன்பு அபிநய் உருக்கமாகப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவரின் அகால மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அபிநய் தனது திரைப்பயணத்தை 2002 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, ஜங்ஷன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். பின்னர், முக்கிய கதாபாத்திரங்கள், நாயகனின் நண்பர் வேடங்கள் என சில படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

அவர் டப்பிங் கலைஞராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக, பிளாக்பஸ்டர் திரைப்படமான துப்பாக்கியில் வில்லனுக்கு குரல் கொடுத்ததன் மூலம் டப்பிங் துறையிலும் பிரபலமானார். என்றென்றும் புன்னகை மற்றும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகியவை அவர் இறுதியாக நடித்த சில திரைப்படங்களாகும்.

அபிநய் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, நகைச்சுவை கலைஞரும், சின்னத்திரை பிரபலமுமான KPY பாலாவின் மனிதாபிமான உதவி அவருக்குக் கிடைத்தது. விஜய் டிவியின் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு மூலம் புகழ்பெற்ற பாலா, அபிநய்யின் மருத்துவ செலவுகளைக் குறைக்கும் வகையில், ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து, அவரை நேரில் சென்று சந்தித்தார்.

அந்த உணர்ச்சிபூர்வமான சந்திப்பின்போது, மனதளவில் மிகவும் சோர்வடைந்திருந்த அபிநய் கண்ணீருடன், பாலா சீக்கிரமா போயிடுவேன், என்று கூறியிருக்கிறார். உடனடியாக, அவருக்கு ஆறுதல் கூறிய பாலா, அப்படி எல்லாம் சொல்லாதீங்க அண்ணா. நாங்க எல்லாம் இருக்கோம். நீங்க சீக்கிரமா உடல்நிலை சரியாகி மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும், என்று நம்பிக்கையூட்டினார்.

அபிநய்யை உற்சாகப்படுத்தும் விதமாக, பாலா நகைச்சுவையாக, அப்படி நடிக்கும்போது உங்க படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு தருவீங்களா? என்று கேட்க, அபிநய் புன்னகைத்திருக்கிறார். பாலாவின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் பரவி, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றது. சீக்கிரமாக குணமடையுங்கள் அபிநய் அண்ணா என்று பாலா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

கஷ்டமான நேரத்தில் சக கலைஞருக்கு பாலா வழங்கிய இந்த உதவி, திரையுலகில் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நினைவூட்டியது. அபிநய்யின் இழப்பு தமிழ் திரையுலகிற்கு ஒரு பேரிழப்பு. அவரது கலைப் பங்களிப்பும், அவரது இறுதி நாட்களில் வெளிப்பட்ட மனிதநேயமும் என்றும் நினைவுகூரப்படும்.

Share on:

Latest Post